Friday, December 19, 2008

மனுஷனோட அடையாளம்

சலீம் நானாவும், பஷீர் காக்காவும் வழக்கம் போல பேசிக் கொண்டிருந்தனர். அவர்களின் பேச்சை கேட்டு, நல்ல பல விஷயங்கள் தெரிந்து கொள்ளலாம் என்று சிலரும் குழுமி இருந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர், "என்ன மொம்தம்பி, பாத்து நாளாச்சி? என்று தன் பக்கத்தில் அமர்ந்திருந்த முஹம்மத் தம்பியை பார்த்துக்கேட்க, அவரோ "அட ஆம்தம்பியா? நான்கூட உன்னைக் கண்டு நாளாச்சி, எப்படி இருக்கிறே? என குசலம் விசாரித்தார் அஹ்மத் தம்பியை நோக்கி.


இதைப் பார்த்த பஷீர் காக்காவுக்கு மூக்குமேல் கோபம் வந்துவிட்டது. "அட கிறுக்கு புடிச்ச பயல்களா, அழகான பெயர முறையா கூப்டாம, அவசரத்துல யான்கடா இப்படி குழப்புறீங்க. அபூபக்கர் என்ற அழகான பெயர, அவ்கருன்னும், முகைதீன் அப்துல் காதர் - மய்யத்துக்காரு என்றும், நெய்னா முஹமத் சாஹிப்-நெயனாம்சா என்றும், பாக்கர் சாஹிப்-வாகர்சா என்றும், கதீஜாவை கர்சா என்றும், அஹ்மத் பாத்திமாவை ஆமாத்து என்றும், முஹம்மத் பாத்திமா என்பதை மொம்மாத்து என்றும் இப்படி போட்டு மாத்தி போடுறது நல்லாவா இருக்கு?"என்று கடுப்போடு கேட்டார்.

"ஒரு மனுஷனோட அடையாளம், அவனோட பேருதான். அதே மாதிரி குடும்ப பேரையும் தன்னோட இஷ்டத்துக்கு வச்சி கூப்புடுறாங்க. சமையல் பாத்திரங்கள் பேர்ல குடும்ப பேரு,நிறத்தை வச்சி குடும்ப பேரு, தொந்தியை வச்சி, உயரத்தை வச்சி, நிறத்த வச்சி, மிருகங்கள் பேர வச்சி,அடாடா எப்படியெல்லாம் கூப்பிடறாங்க. இதுக்கு ஒரு அளவே இல்லாம போச்சி. தயவு செஞ்சி இனிமே இப்படி யாரும் கூப்பிடக் கூடாது " ஆத்திரத்தோடு சொன்னார் பஷீர் காக்கா.
***********************************************

அநீதமிழைக்கப்பட்டவரைத்தவிர,வார்த்தையில் தீயதை பகிரங்கமாக கூறுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான்.அல்லாஹ்(யாவையும்)செவி ஏற்கிறவனாக, நன்கு அறிந்தோனாக இருக்கிறான். திருக்குரான் 4:148