Thursday, January 15, 2009

மரணத்திலும் வழிகின்ற பாசம்!

இன்றைய பொழுதுகள் ஏனோ வழமையாக விட எரிச்சலாகவும் துன்பமாகவும் கழிகின்றன. என்னைப் பிடித்திருக்கும் தடிமனும் காய்ச்சலும் காரணங்களாக இருக்கலாம். ஆனாலும், இரவு இணையத்தில் நுழைகின்றேன். மனதைக் கசக்கிப் பிழியும் சில படங்களும், சுருதி மாறாத அதே செய்திகளும் தான் இருக்கின்றன... நிலம் கைப்பற்றல், முன்னேற்றம் முறியடிப்பு, தாக்குதலில் அப்பாவி உயிர்கள் பலியெடுப்பு.... வழமைக்கு மாறாக இன்று அவர்களும் ஜனநாயக நாடு பற்றி விவாதிக்கின்றார்கள். ஊடகவியலுடன் மருத்துவம் இரு மணித்தியாலங்கள் போராடியும் ஊடகவியலைக் காப்பாற்ற முடியவில்லையாம். :-(

இணையத்தில் மேய்ந்த போதுதான் இந்தப் புகைப்படங்கள் என்னை ஒருகணம் அதிரச்செய்தன. யூதர்களைக் கொன்றதால் சர்வதிகாரியாக மரணித்தான் ஹிட்லர். அவன் சர்வதிகாரிதான். மறுக்கவில்லை. ஆனால், இன்று பாலஸ்தீனத்தில் நடந்து கொண்டிருப்பதற்கு என்ன பெயர்? "ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான போர்" என்ற மகுடம் தாங்கி காசாப் பிரதேசத்தில் தனது அனைத்து அட்டூழியங்களையும் அப்பாவி மக்கள் மீது ஏவி விடுகின்றது இஸ்ரேல் படை. நேற்றுக்கூட தங்களது உறைவிடங்கள் தாக்குதலில் தரைமட்டமானதினால் பாடசாலையில் தஞ்சம் புகுந்த பாலஸ்தீனர்களை இஸ்ரேல் கொத்தாக பலியெடுத்திருக்கின்றது.

உலகத்தின் கண்களுக்கு இவையெல்லாம் தெரிந்தாலும் அவை விழித்தெழப்போவதில்லை. ஒரு அறிக்கை... அல்லது ஒரு கண்டனம். அத்துடன் எல்லாம் அடங்கி விடும். மீட்பர்கள் வருவார்கள் என அமெரிக்காவையோ அல்லது அண்டை தேசங்களையோ நம்பிப் பயனில்லை. வேண்டுமானால், செத்தபின் வாய்க்கரிசியிட அல்லது அடுக்கி வைத்து அனல் மூட்ட அவர்கள் அணிவகுத்து நிற்க முடியும்.

இஸ்ரேலின் ஏவுகணைத் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த தாயும் சேயும் மரணத்தறுவாயில் நடத்தும் பாசப்போராட்டம் இது. இங்கு யார் யாரை மீட்பது?




பாலஸ்தீனத்தில் மட்டும் தானா இந்தப் பாசப்பிணைப்பு...? இல்லவே இல்லை. வீட்டுப் படலையை ஒருமுறை திறவுங்கள்....

No comments: